அக்டோபர் 21, 2019

விசுவக்குடியில் பயன்பாடற்ற கிணற்றுக்கு கம்பி வளையம் அமைத்து மூட கோரிக்கை

விசுவக்குடியில் பயன்பாடின்றி ஆபத்தான நிலையிலுள்ள திறந்தவெளி கிணற்றை கம்பி வளையம் போட்டு முழுவதுமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். வேப்பந்தட்டை அடுத்த அன்னமங்கலம் ஊராட்சி, விசுவக்குடி கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கிராம மக்களின் குடிநீர் தேவைகளுக்காக, வடக்கு தெருவில் கிணறு அமைக்கப்பட்டது. இந்த கிணற்று நீரை, கிராம மக்கள் குடிநீர் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அங்கு மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டதால், இந்த கிணற்றின் பயன்பாடு குறைந்தது. தற்போது பயன்பாடின்றி உள்ள இந்த கிணறு திறந்துகிடக்கிறது. இதன் சுற்றுசுவரும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் கிணற்றின் அருகில் நூலகமும் இயங்கி வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் நடுத்தர வயதுடைய பெண் ஒருவர் இந்த கிணற்றில் விழுந்து காயங்களுடன் மீட்கப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது.

இங்கு குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதி என்பதால் சுமார் 50 அடி ஆழமுள்ள இந்த கிணற்றின் அருகே விளையாடும் சிறுவர்கள் தவறிவிழும் அபாயம் உள்ளது.

 எனவே மீண்டும் விபரீதம் ஏற்படுவதற்கு முன்னர் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள இந்த கிணற்றை கம்பி வளையம் போட்டு முழுவதுமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Previous Post
Next Post

post written by: