டிசம்பர் 18, 2019

அன்னமங்கலம் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் சட்டம் பயின்ற இளம் பட்டதாரிப் பெண்..!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. இதில் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு இரண்டாவது கட்டமாக டிசம்பர் 30ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒன்றியத்தில் உள்ள அன்னமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட பட்டதாரிப் பெண் சுகன்யா வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

24 வயதுடைய சுகன்யா திருமணமாகாதவர். இவர் ஒரு பொறியியல் பட்டதாரி. மேலும் திருச்சி அரசு சட்டக் கல்லூரியில் சட்டமும் பயின்றுள்ளார். இவர் நினைத்தால் தனியார் துறையில் அதிக வருமானம் ஈட்டி சொகுசாக வாழலாம். 

ஆனால் மக்களுக்கு சேவையளிக்க வேண்டும் என்கிற சுகன்யாவின் முயற்சிகளுக்கு விவசாயம் மற்றும் மளிகை கடை தொழில் செய்து வரும் இவரது தந்தை கணேசன் தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறார்.

இதுகுறித்து சுகன்யா கூறும் போது, "இந்த ஊராட்சிக்கு தேவையான சாலை, மின்சாரம், பொது சுகதாரம் போன்ற அடிப்படை வசதிகளை உடனுக்குடன் அதிகாரிகள் மூலம் நிறைவேற்றிட நடவடிக்கை எடுப்பேன். மேலும் மக்களின் உண்மையான பிரச்சினைகள் என்னவென அறிந்து ஒரு சகோதரியாக உடனிருந்து பூர்த்தி செய்து தருவேன்." என்று உறுதியாகக் கூறினார்.

இந்த சகோதரியை அன்னமங்கலம் ஊராட்சி வாசிகள் வெற்றிபெற செய்வார்களா?
Previous Post
Next Post

post written by: