செப்டம்பர் 11, 2023

விசுவக்குடி முதல் தெருவில் "சிமெண்ட் பேவர் பிளாக்'" சாலை அமைத்து தர கோரிக்கை


பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியம், அன்னமங்கலம் ஊராட்சியில் விசுவக்குடி கிராமம்  உள்ளது.  இங்குள்ள முதல் (தெற்கு) தெருவில் சுமார் 50க்கும் அதிகமான வீடுகளில் சுமார் 200க்கும் அதிகமானவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு சுமார்  15 ஆண்டுகளுக்கு முன்பு அமைத்த சுமார் 150 மீட்டர் தார்சாலை சேதமடைந்து ஜல்லிகற்கள் பெயர்ந்து கரடுமுரடாக உள்ளது. 

இந்த தெரு சாலையை பயன்படுத்தி தான் ஊராட்சி ஓன்றிய தொடக்கப் பள்ளி, சமுதாய நலக்கூடம், தொழுகைக்காக பள்ளிவாசல், அடக்க தளம், விவசாய நிலங்கள் போன்றவைகளுக்கு  சென்றுவர பயன்படுத்தப்படுகிறது.

வெயில் காலங்களில் இந்த தெரு சாலை புழுதியாகவும், மழை காலங்களில்  சேறும் - சகதியுமாக இருப்பதனால் இந்த தெருவில்  நடந்து செல்வதற்கு இங்குள்ளவர்கள்  குறிப்பாக சிறுவர்கள் மற்றும் வயதானவர்கள் மிகவும் சிரம படுகின்றனர். மேலும் இருசக்கர வாகனங்களில் செல்வோரும் வழுக்கிவிழும் அபாயம் உள்ளதால் அவதிக்கு உள்ளாகின்றனர். 

எனவே, இப்பகுதி மக்களின் நலன் கருதி விசுவக்குடி முதல் (தெற்கு) தெருவின் இருபுறமும்  சாக்கடை வசதியுடன் புதிதாக சிமெண்ட்  'பேவர் பிளாக்' சாலை அமைத்து தர, வேண்டுமென விசுவக்குடியில் உள்ள சமூக ஆர்வலர்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

விசுவக்குடியில் 4-வது தெருவில் கழிவுநீர் கால்வாய் அமைக்க கலெக்டரிடம் மனு


பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியம், அன்னமங்கலம் ஊராட்சியில் விசுவக்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அன்னமங்கலம் ஊராட்சியின் வார்டு எண் 2 மற்றும் 3 என இரண்டு ஊராட்சி வார்டுகள் உள்ளது.

இங்குள்ள 2வது வார்டில்  உள்ள  வடக்கு (4வது) தெருவில்  சுமார் 50க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இந்ந தெருவின் ஒருபகுதியில் கிழக்கு திசையில் இதுவரை சாக்கடை வசதி இல்லை. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர் போன்றவர்களிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சிலர்  சாலையோரம் குழி தோண்டி, சாக்கடை நீரை  தேக்கி வைத்துள்ளனர். அதனால் துர்நாற்றம் வீசுவதோடு, கொசு உற்பத்தி அதிகமாகி கொசு தொல்லை பெருகி வருகிறது. 

வடிகால் இல்லாததால் மழை காலங்களில் அதிகப்படியான மழையால் சாக்கடை கலந்த மழைநீர் குடியிருப்புகளில் புகுந்து தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

எனவே டெங்கு, மலேரியா  போன்ற நோய்களில் இருந்து இப்பகுதி மக்களை பாதுகாக்கும் விதமாக வருகிற மழை காலத்திற்கு முன்பாக அடிப்படை வசதியான சாக்கடை வசதியை செய்து தருமாறு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது

செப்டம்பர் 08, 2023

விசுவக்குடியில் கழிவுநீர் கால்வாய் பாலம் சேதம் - விபத்து ஏற்படும் அபாயம் - உடனடியாக சீரமைக்க கோரிக்கை


வேப்பந்தட்டை ஒன்றியம், அன்னமங்கலம் ஊராட்சியின்  2வது வார்டு விசுவக்குடி 3வது தெருவில் சுமார் 200க்கும் அதிகமானவர்கள் வசித்து வருகின்றனர்.

இந்த தெருவின் ஆரம்பம் மற்றும் முடிவில் உள்ள கழிவுநீர்  பாலம் உடைந்து,  பள்ளம் விழுந்து சுமார் 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. பலமுறை கோரிக்கை வைத்தும் ஊராட்சி நிர்வாகம் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நடந்து செல்பவர்களும், இரண்டு சக்கர வாகனத்தில் செல்பவர்களும் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

பள்ளி சென்றுவரும்  குழந்தைகள், கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், பேருந்து நிறுத்தம் சென்று வருபவர்கள் மற்றும் வீட்டு தேவைகளுக்காக கடைகளுக்கு சென்று வருபவர்கள்  இந்த பாலத்தை கடந்துதான் சென்றுவர வேண்டும். 

மெயின் ரோட்டில் இருந்து குறுக்கு தெருவாக வளைந்தவுடன் திடீரென பள்ளம் இருப்பதை கவனிக்க முடியாமல் புதிதாக வரும் வாகன ஓட்டிகள்  விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

இந்த கழிவுநீர் பாலம் மிகவும் சேதம் அடைந்துள்ளதால் , இதனால் கனரக வாகனங்கள், ஆட்டோ மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களை 3வது தெருவுக்குள்  வர சிரமமாக உள்ளது. இதனால் இந்த தெரு மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.

எனவே சேதமடைந்த இந்த கழிவுநீர் கால்வாய் பாலத்தை ஊராட்சி நிர்வாகம் உடனடியாக சீரமைக்க பொதுமக்கள் சார்பாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.