அக்டோபர் 15, 2023

விசுவக்குடியில் மழை வேண்டி சிறப்பு தொழுகை

 


வடகிழக்கு பருவமழை தாமதமாகி வருவதால் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா பகுதியில் தற்போது கடுமையான வறட்சி  நிலவி வருகிறது.

 அக்டோபர் முதல் டிசம்பர் இறுதி வரை வடகிழக்கு பருவமழை காலமாகும். இந்த காலகட்டத்தில் தான் பரவலாக அதிக அளவில் மழைப்பொழிவு கிடைக்கும். ஆனால் அக்டோபர் மாதம் தொடங்கி 15 நாட்கள் ஆன நிலையில் இன்னும் வடகிழக்கு பருவமழை தொடங்காமல் உள்ளது.

இதனால் நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் பொதுமக்கள் மிகவும் கவலையடைந்து வருகின்றனர். கால்நடைகளுக்கு புற்கள் கூட இல்லாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.

எனவே மழை பெய்ய வேண்டி விசுவக்குடியில் சிறப்பு தொழுகை நடத்த ஜமாத்தார்கள் முடிவு செய்தனர். அதன்படி, இன்று காலை 8 மணி அளவில் விசுவக்குடி களத்துமேடு பகுதியில் வறட்சி நீங்க, மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது.

தொழுகையை விசுவக்குடி அத்-தக்வா பள்ளிவாசலின்  இமாம் முஹம்மது சுலைமான் தலைமை தாங்கி நடத்தினார். அதனைத் தொடர்ந்து பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டு மழை வேண்டி பிரார்த்தனை செய்தனர்.