மார்ச் 25, 2020

விசுவக்குடியில் கிருமிநாசினி தெளிக்கும் பணி
பெரம்பலூர் மாவட்டம், அன்னமங்கலம் ஊராட்சியில் உள்ள விசுவக்குடியில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

இயந்திரம் மூலம் விசுவக்குடியில் உள்ள  வீடுகள் மற்றும் தெருக்களில் இன்று புதன்கிழமை (மார்ச் 25) கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. பணியை ஊராட்சியின் 2வது வார்டு உறுப்பினர் குதரத்துல்லா பாா்வையிட்டாா்.

மார்ச் 24, 2020

விசுவக்குடி பள்ளிவாசலில் தொழுகைகள் நிறுத்தப்பட்டு, மூடப்பட்டது.!
கொரோனா வைரஸ் (COVID-19) தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளது. காரணம், மனிதர்கள் ஒருவருக்கொருவர் நெருங்கி இருப்பதன் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதால், மக்கள் கூட்டம் கூட்டமாக சங்கமிக்கும் அனைத்து வாய்ப்புகளையும் அரசு கட்டுபடுத்தி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள விசுவக்குடி பள்ளிவாசலிலும் தொழுகைகள் நிறுத்தப்பட்டு மூடப்பட்டுள்ளது.

மேலும் தொழுகைக்கான பாங்கு (அழைப்பு) ஐவேளையும் மசூதிகளில் ஒலிக்கும். அதனைத் தொடர்ந்து, அவரவர் வீட்டில் இருந்தபடி தொழுது கொள்ளும்படி ஜமாத் நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டு பள்ளிவாசல் முன்பு  இன்று (மார்ச் 24) அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு மக்களிடையே வரவேற்பும் வருத்தமும், கலந்த விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.



இரங்கல் செய்தி
விசுவக்குடியில் சமுதாய அமைப்புகளின் வெளிச்சம் உங்களால் தான் கிடைத்தது. இங்கு முதன் முதலில் பொதுக்கூட்டம் நடைபெற்றதும் அதுவும், சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டமாக நடைபெறவும் நீங்கள்தான் காரணம்.

அந்த நிகழ்வை நீங்கள் தலைமை ஏற்றும் நடத்தினீர்கள். அப்போது "அரசியலும், மார்க்கமும் வெவ்வேறு அல்ல, இரண்டும் நமது கண்கள்" என்று நீங்கள் உரையாற்றி பேசியது இன்னும் இரண்டு காதுகளிலும் கேட்டுக் கொண்டே இருக்கிறது.

நான் நூலகத்தில் இருந்ததைவிட உங்கள் வீட்டில் உங்களுடன் பேசிக்கொண்டு இருந்ததுதான் அதிகம். ஏனெனில் உங்கள் அறையில் கிதாபுகள் அதிகம். ஏதேனும் விளக்கம் கேட்டால் அலமாரியில் இருக்கும் உருது மொழி கிதாபை எடுத்து தமிழில் மொழி பெயர்த்து விளக்கம் தருவீர்கள். இன்று உங்களை போன்ற மார்க்க அறிஞர் விசுவக்குடி யில் இல்லை.

நீங்கள் பல மார்க்க அறிஞர்களை உருவாக்கியவர். நான் உங்களின் மாணவன் இல்லை. ஆனால், திருச்சி, திண்டுக்கல் சாலையில் உள்ள ஒரு அரபு கல்லூரியில் பயின்றேன். அப்போது எனக்கு குர்ஆன் கற்றுக்கொடுத்த உஸ்தாதின் உஸ்தாத் நீங்கள். இப்படி உங்களைப் பற்றி சொல்ல ஏராளமான... விஷயங்கள் உள்ளது.

அன்பானவர், பழகுவதற்கு எளிமையான வருமான மௌலானா அப்துல் ஹை ஹள்ரத் ஆகிய உங்களின் இரங்கல் செய்தி கேட்டு உங்கள் நினைவுகள் என்னை வாட்டி வதைக்கிறது.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அல்லாஹ் உங்களுக்கு ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் உயர்ந்த அந்தஸ்தை வழங்குவானாக...

நினைவுகளுடன்...
தௌ.மு.ஜகரிய்யா