அக்டோபர் 21, 2019

விசுவக்குடியில் பயன்பாடற்ற கிணற்றுக்கு கம்பி வளையம்  அமைத்து மூட கோரிக்கை
விசுவக்குடியில் பயன்பாடின்றி ஆபத்தான நிலையிலுள்ள திறந்தவெளி கிணற்றை கம்பி வளையம் போட்டு முழுவதுமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். வேப்பந்தட்டை அடுத்த அன்னமங்கலம் ஊராட்சி, விசுவக்குடி கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கிராம மக்களின் குடிநீர் தேவைகளுக்காக, வடக்கு தெருவில் கிணறு அமைக்கப்பட்டது. இந்த கிணற்று நீரை, கிராம மக்கள் குடிநீர் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அங்கு மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டதால், இந்த கிணற்றின் பயன்பாடு குறைந்தது. தற்போது பயன்பாடின்றி உள்ள இந்த கிணறு திறந்துகிடக்கிறது. இதன் சுற்றுசுவரும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் கிணற்றின் அருகில் நூலகமும் இயங்கி வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் நடுத்தர வயதுடைய பெண் ஒருவர் இந்த கிணற்றில் விழுந்து காயங்களுடன் மீட்கப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது.

இங்கு குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதி என்பதால் சுமார் 50 அடி ஆழமுள்ள இந்த கிணற்றின் அருகே விளையாடும் சிறுவர்கள் தவறிவிழும் அபாயம் உள்ளது.

 எனவே மீண்டும் விபரீதம் ஏற்படுவதற்கு முன்னர் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள இந்த கிணற்றை கம்பி வளையம் போட்டு முழுவதுமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 06, 2019

விசுவக்குடி ஜமாத் நிர்வாகிகள் தேர்வு
பெரம்பலூர் மாவட்டம், விசுவக்குடி அத்-தக்வா பள்ளிவாசல் ஜமாத் புதிய நிர்வாகிகள் தேர்வு நேற்று (அக்.6) இரவு 9:30 மணியளவில் நடைப்பெற்றது.
ஓய்வு ஆசிரியர் அமானுல்லா அவர்களின் தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்வை பள்ளியின் இமாம் முஹம்மது சுலைமான் இறைமறை ஓதி தொடங்கி வைத்தார்.

முதலில் செயற்க்குழு உறுப்பினர்கள் 18 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தலைவராக ஹாஜி ரஜாக் (முதல்வீதி), செயலாளராக முஸ்தபா, பொருளாளராக ஓய்வு ஆசிரியர் அமானுல்லா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

பின்னர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். துணை தலைவர், துணை செயலாளர் போன்ற பதவிகளை செயற்குழு கூடி இன்னொரு நாளில் முடிவு செய்யும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் விசுவக்குடி ஜமாத்தை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.

அக்டோபர் 02, 2019

  ஒரே திட்டத்திற்காக இரண்டு முறை ஒதுக்கப்பட்ட நிதி: கிராமமக்கள் நீர் ஆதாரத்திற்காக காத்திருக்கிறார்கள்
ஒரே  குடிநீர் திட்டத்துகாக இரண்டு முறை நிதி ஒதுக்கப்பட்டதாக விசுவக்குடி கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் பணிகள் முழுமையாக செய்து முடிக்கவில்லை. பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியில் உள்ள இந்த விசுவக்குடி கிராமம் குடிநீர் தட்டுபாட்டை சந்தித்து வருகின்றது. 

ஒரு கிணற்றில் இருந்து, அங்கு வசிப்பவர்களுக்கு நீர் ஆதாரமாக மின் மோட்டார், பைப்லைன், பம்ப்ரூம் மற்றும் அந்த கிணற்றை சுற்றி சுற்றுசுவர் அமைக்க 27 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை  டெண்டர் அறிவித்துள்ளது.

ஆனால் தற்போது  இரண்டாவது முறையாக இதே திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக கிராம மக்கள் புகார் கூறினர். 2018-2019 ஆம் ஆண்டில், மாவட்ட ஊரக வளர்ச்சி துறை  (DRDA) இதே நோக்கத்திற்காக ரூ .18.71 லட்சம் ஒதுக்கியது, ஆனால் கிணறு மட்டுமே  தோண்டப்பட்டது. பம்ப் மோட்டார்கள் நிறுவப்படவில்லை மேலும் பைப்லைன் அமைக்கவில்லை.  இந்த திட்டம் முடிவடைய வேண்டும் என்று கிராம மக்கள் பலமுறை வலியுறுத்தினர்.  இதன் விளைவாக மாவட்ட ஊரக வளர்ச்சி துறை முழுமையடையாத இத்திட்டத்திற்கு மீண்டும் நிதி ஒதுக்குகிறது.

400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் விசுவக்குடியில் வசிக்கின்றன.  பஞ்சாயத்து யூனியன் மூலமாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு அதன் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கடுமையான குடிநீர் தட்டுபாடு இங்கு நிலவுகிறது. இதன் காரணமாக,  மாவட்ட ஊரக வளர்ச்சி துறை குடிநீர் கிணறு அமைக்க முடிவு செய்தது. முதல் சந்தர்ப்பத்தில், கிணறு 70 அடிக்கு தோண்டப்பட்டது, ஆனால் குடிநீர்  எதுவும் கிடைக்கவில்லை. பின்னர் எந்த வேலையும் செய்யப்படாமல், திட்ட விவரங்களைப் பற்றிய ஒரு பலகை  மட்டுமே அங்கு அமைக்கப்பட்டது. 

மாவட்ட ஊரக வளர்ச்சி துறையின் புதிய நிதி ஒதுக்கீட்டைப் பற்றி அறிந்ததும், திங்களன்று மீண்டும் ஒரு மனுவை தாக்கல் செய்ய அவர்கள் மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு  வந்தார்கள். 
கிராமவாசி அ. குதுரதுல்லா கூறுகையில், “பஞ்சாயத்து 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீரை வழங்குகிறது, ஆனால் எங்களுக்கு  தினமும் குடிநீர் தேவை. நாங்கள் பஞ்சாயத்து மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பல புகார்களை பதிவு செய்திருந்தாலும், அது அனைத்தும் வீணானது ”.

"தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்" வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர். இளங்கோவனைத் தொடர்பு கொண்டபோது, ​​அவர் கூறினார், “எங்களுக்கு காரணங்கள் உள்ளன. நங்கள் எந்த தவறும் செய்யவில்லை.

பட விளக்கம்: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள விசுவக்குடி கிராமத்தில் கிணறு புதிதாக தோண்டப்பட்டாலும், பல புகார்கள் வந்தாலும் இங்கு தண்ணீர் கிடைக்கவில்லை.

Box News: மக்கள் அதிர்ச்சியடைந்தார்கள், அவர்களுக்கு ஒரு பலகை மற்றும் ஆழமான கிணறு  மட்டுமே  கிடைத்தது, வேறு ஒன்றும் இல்லை". என்று  கிராமவாசிகள் சொன்னார்கள்: அவர்கள் பஞ்சாயத்து அலுவலகத்தை அணுகினர், ஆனால் அதிகாரிகள் பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மூன்று மனுக்களுடன் இப்பிரச்சனையை தொடர்ந்தனர், ஆனால் மீண்டும் எந்த பலனும் இல்லை.

இது நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வந்த செய்தியின் மொழியாக்கம்

நன்றி: ஜெய்னுதீன் - சவுதி அரேபியா





விசுவக்குடி பள்ளிவாசல் பின்புறம் உள்ள தெருவில் சோலார் மின்விளக்கு அமைக்க வேண்டும். கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று (அக்:2) பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அன்னமங்கலத்தில் கிராமசபை கூட்டம் நடைப்பெற்றது. 

இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டி இன்று காலை விசுவக்குடி பள்ளிவாசலில் உள்ள ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் அன்னமங்கலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அப்துல் ஹக், அல் அமீன் இளைஞர் மன்ற தலைவர் முபாரக் அலி, தமுமுக மாவட்ட செயலாளர் குதரத்துல்லா, ஜமாத் தலைவர் காதர் ஒலி, முன்னாள் ஊராட்சி மன்ற 2வது வார்டு உறுப்பினர் முஸ்தபா,  சாலிகரீம் மற்றும் இளைஞர்கள் என சுமார் 20 பேர் கலந்து கொண்டனர்.

இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வேப்பந்தட்டை,  விசுவக்குடி வழிதடத்தில் பெரம்பலூரில் இருந்து பூலாம்படிக்கு புதிய வழிதடத்தில் பேருந்து இயக்குதல்,

வேப்பந்தட்டை, அன்னமங்கலம், கிருஷ்ணாபுரம் புதிய வழிதடத்தில்  பெரம்பலூரில் இருந்து வீரகனூருக்கு பேருந்து இயக்குதல்,

அன்னமங்கலத்தில் ஏடிஎம் வசதியுடன் கூடிய தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கியை ஏற்படுத்துதல்,

முகமது பட்டினத்தில் இருந்து கிருஷ்ணாபுரம் செல்லும் சாலையை மீண்டும் தரமாக சீரமைத்தல்,

விசுவக்குடியில் இருந்து விசுவக்குடி அணை செல்லும் சாலையை தார் சாலையாக தரம் உயர்த்துதல்,

விசுவக்குடி பள்ளிவாசல் பின்புறம் உள்ள தெருவில் சோலார் மின்விளக்கு அமைத்தல்.... போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கிராமசபை கூட்டங்களை சுழற்சி முறையில் கிளை கிராமங்களில் நடத்த வேண்டும். முன்னாள் அன்னமங்கலம்  ஊராட்சி மன்ற தலைவர் கோரிக்கை
கிராம சபை கூட்டங்களை சுழற்சி முறையில் கிளை கிராமங்களில் நடத்த வேண்டும். விதிகள் மாற்றப்பட்டதாக கூறுவதை ஏற்க முடியாது என முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று (2ம் தேதி) கிராமசபை கூட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. இந்த கூட்டங்களை ஊராட்சியின் தலைமை இடத்திலேயே நடத்தாமல் ஊராட்சிக்கு உட்பட்ட கிளை கிராமங்களில்  சுழற்சி அடிப்படையில் மாறிமாறி நடத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து அன்னமங்கலம் ஊராட்சியில் தொடர்ந்து 10 ஆண்டுகள் தலைவராக பதவி வகித்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் விசுவக்குடி அப்துல் ஹக் ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது.
நான் அன்னமங்கலம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த போது கிளை கிராமமான அரசலூரில் கிராமசபை கூட்டத்தை நடத்தியுள்ளேன். ஆனால் மற்றோரு கிளை கிராமமான விசுவக்குடி கிராமத்தில் கிராம சபைக் கூட்டத்தை நடத்த மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்தும் நடத்த மறுக்கிறார்கள்.
அந்தந்த கிளை கிராமங்களிலும் கிராம சபை கூட்டங்களை ஆண்டுக்கு ஒருமுறை நடத்தினால் தான் கிளை கிராமத்திற்கு ஒதுக்கப்பட்டு செலவிடப்பட்ட நிதி விபரங்கள் அக்கிராம அனைத்து மக்களுக்கும் தெரியவரும்.
இதுபற்றி எங்கள் ஊரைச் சேர்ந்த ஜகரிய்யா என்பவர் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் தீர்வு கிடைக்காத நிலையில் சமீபத்தில் காந்தி ஜெயந்தி அன்று நடத்தப்படும் கிராமசபை கூட்டத்தையாவது விசுவக்குடியில் நடத்த வேண்டும் என தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்கு அனுப்பிய கோரிக்கை மனுவுக்கு, வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பாக அளித்துள்ள பதிலில்
முதலில் மனுதாரரின் கோரிக்கை ஏற்க்கபட்டு கிளை கிராமங்களில் சுழற்சி அடிப்படையில் கிராம சபை கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்படுமென்றும், பிறகு அடுத்த வந்த பதிலில் அன்னமங்கலம் ஊராட்சி அரசலூர், விசுவக்குடி, முகமது பட்டினம், பிள்ளையார் பாளையம், ஈச்சங்காடு, பூம்புகார் ஆகிய 6 கிளை கிராமங்கள் இருப்பதால் அத்தனை கிராமத்தினரின் கோரிக்கை தலைமை இடத்தில் இருந்து மட்டுமே நிறைவேற்ற முடியும் என்பதால் கோரிக்கை மனு நிராகரிக்கப்படுவதாகவும், இருவேறு முரண்பட்ட பதில்கள் தரப்பட்டுள்ளன.
இது அதிகாரிகளின் குழப்ப நிலையை காட்டுகிறது. விரைந்து தெளிவான முடிவெடுத்து கிளை கிராமங்களுக்கு சாதகமான பதில்களை தரவேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதனால் கிராம சபைக் கூட்டங்களை பொதுமக்களின் எதிர்ப்புகளை சமாளிப்பதற்காக, பல ஊராட்சிகளில் கிளை கிராமத்தினர் வந்து சேரும் முன்பாக உள்ளூரை சேர்ந்த குறைந்த நபர்களைக் கொண்டு, திட்ட பணிகள் முறைகேடு குறித்துக் கேள்வி எழுப்பாத மகளிரை வைத்துக் கொண்டு பிரச்சினைகள் வெடிக்கும் முன்பாக நடத்தி முடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.








கிராமசபை கூட்டங்களை சுழற்சி முறையில் கிளை கிராமங்களில் நடத்த வேண்டும். முன்னாள் அன்னமங்கலம்  ஊராட்சி மன்ற தலைவர் அப்துல் ஹக் கோரிக்கை


 நன்றி: தினகரன்

அக்டோபர்:2


அக்டோபர் 01, 2019

ஊழலுக்கு வழிவகுக்கும் என்பதால், பணிகள் முடிந்த திட்டங்களுக்கு மீண்டும் டெண்டர் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டு
பணிகள் முடிந்த திட்டங்களுக்கு மீண்டும் டெண்டர் அறிவிப்பு ஊழலுக்கு வழிவகுக்கும் என்பதால் டெண்டரை ரத்து செய்யக்கோரி விசுவக்குடி கிராமத்தினர் பெரம்பலூர் கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்டது விசுவக்குடி கிராமம். இவ்வூரைச் சேர்ந்த முன்னாள் அன்னமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் அப்துல் ஹக் தலைமையில் விசுவக்குடி ஜமாத் பொருளாளர் அமானுல்லா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர் குதரத்துல்லா உள்ளிட்ட பலர் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து, கலெக்டரிடம் சாந்தாவிடம் அளித்த புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது,

அன்னமங்கலம் ஊராட்சி, விசுவக்குடி கிராமத்தில் போதிய மழை இல்லாததால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனவே இங்கு குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் விதமாக விசுவக்குடி தொடக்கப்பள்ளியின் அருகே உள்ள ஊரணி - குளத்தில் புதிய கிணறு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

ரூ 18.71 லட்சம் மதிப்பில் 2018 - 2019-ம் ஒன்றிய பொது நிதியில் புதிய கிணறு அமைத்தல், சுற்றுச்சுவர் கட்டுதல், மின்மோட்டார் அமைத்தல், பம்ப்ரூம் கட்டுதல் மற்றும் பைப்லைன் அமைத்தல் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

கிணறு மற்றும் சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் மட்டும் முடிந்துள்ள நிலையில் நேற்று திங்கட்கிழமை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மின்மோட்டார் அமைத்தல், பம்ப்ரூம் அமைத்தல் மற்றும் பைப்லைன் அமைத்தல் போன்ற அதே பணிகளுக்காக ரூபாய் 27 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பில் மீண்டும் டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.

பழைய மதிப்பில் உள்ள மின்மோட்டார்  மற்றும் பைப்லைன் போன்றவை அமைக்காமல் செலவு செய்யப்பட்டு இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. இந்த புதிய டெண்டர் மூலம் பொதுமக்கள் பணம் வீணடிக்கப்பட இருப்பதாக தெரிகிறது. இந்த ஒப்பந்தத்தை அனுமதித்தால் ஊழலுக்கு வழிவகுப்பதாகவே அமையும்.

மேலும் தற்போது ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து தகுந்த நீராதாரம் உள்ள இடத்தை தேர்வு செய்து, புதிய கிணறு வெட்டி, விசுவக்குடி கிராமத்தின் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.

ஊழலுக்கு வழிவகுக்கும் என்பதால், பணிகள் முடிந்த திட்டங்களுக்கு மீண்டும் டெண்டர் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். கலெக்டரிம் விசுவக்குடி மக்கள் மனு
நன்றி: தினகரன்
அக்டோபர்: 01, 2019