பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், விசுவக்குடியில் ரூ.33.7 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அணையை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளிக் காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா சனிக்கிழமை தொடக்கி வைத்தார்.
கல்லாறு ஓடையின் குறுக்கே விசுவக்குடியில் ரூ. 33.7 கோடி மதிப்பில் அணை கட்டும் பணிகள் நிறைவடைந்தன.
இதன் மூலம் 40.67 மில்லியன் கன அடி நீரை 10.30 மீ. ஆழத்துக்கு நீரை சேமிக்கலாம். அணையில் 11.75 மீ. உயரத்துக்கு நீர்ப்போக்கி அமைக்கப்பட்டுள்ளது. அணையின் உபரி நீரானது வெங்கலம் பெரிய ஏரியில் கலக்கிறது.இதனால் நேரடியாக 859 ஏக்கர் புன்செய் நிலம் பாசன வசதி பெறும்.
இந்த அணையை முதல்வர் ஜெயலலிதா காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். தொடர்ந்து,மாவட்ட வருவாய் அலுவலர் ச. மீனாட்சி, பெரம்பலூர் தொகுதி எம்.பி ஆர்.பி. மருதராஜா, அதிமுக மாவட்டச் செயலர் ஆர்.டி. ராமச்சந்திரன், எம்எல்ஏ இரா. தமிழ்ச்செல்வன் ஆகியோர் அணைப் பகுதியில் வெளியேறிய நீருக்கு மலர் தூவி வரவேற்றனர்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி தலைவர் கோ. சகுந்தலா, பொது பணித்துறை தலைமைப் பொறியாளர் அசோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.