அக்டோபர் 09, 2022

விசுவக்குடியில் கந்தூரி விருந்து


இன்று முஸ்லிம்களின் இறுதி தூதரான முகமது நபி அவர்களின் பிறந்த தினம். இந்த தினத்தை மீலாது நபி விழா என கொண்டாடப்படுகிறது. இன்று விசுவக்குடியிலும் இன்று மீலாத் நபி விழா அனுசரிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு இன்று காலை 11 மணி அளவில் அல் ஜன்னத் சமுதாய நலக்கூடத்தில் சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு அத்-தக்வா பள்ளிவாசலின் தலைமை இமாம் மௌலானா முஹம்மது சுலைமான் அவர்கள் தலைமை ஏற்றார். லெப்பை குடிக்காடு கிழக்கு பள்ளிவாசல் இமாம் மௌலானா முஹம்மது ஆரிப் மன்பயி சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்.

நிகழ்வுக்கு பின்னர் அனைவருக்கும் கந்தூரி விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சகோதரத்துவத்துடனும், மத நல்லிணக்கத்துடனும் சுமார் 3 ஆயிரம் பேர் உணவருந்தினர்.



அக்டோபர் 07, 2022

விசுவக்குடியில் சுகாதார சீர்கேடு - உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை


பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியம், அன்னமங்கலம் ஊராட்சியில் விசுவக்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அன்னமங்கலம் ஊராட்சியின் வார்டு எண் 2 மற்றும் 3 என இரண்டு ஊராட்சி வார்டுகள் உள்ளது. 

சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கும் இங்குள்ள 2வது வார்டில் தெற்கு தெரு மற்றும் பள்ளிவாசல் தெருவில் உள்ள சாக்கடை கழிவுநீர் முதல் தெருவின் இறுதியில் ஜமாலுதீன் என்பவரின் வீட்டின் வழியாக, அருகே உள்ள ஓடையில் சென்றடைகிறது.

இந்த தெருக்களில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் அருகில் உள்ள ஓடையில் கலப்பதற்கு முன்பு தூய்மைப்படுத்த கிடைமட்ட வடிவ சமுதாய உறிஞ்சுழி ஒரு லட்சத்து 33 ஆயிரம் செலவில் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு அமைக்கப்பட்டது.

இந்த உறிஞ்சி குழியால் எந்த பயனும் இல்லை என தற்போது புகார் எழுந்துள்ளது. 

சுமார் ஆறு அடி நீளம் நான்கு அடி அகலத்தில் தொட்டி கட்டி அவற்றுள் தண்ணீரை வடிக்க மணல், ஜல்லி கற்கள் போன்றவற்றை நிரப்பி உள்ளனர்.

தொட்டிக்குள் கழிவுநீர் சென்ற பிறகு அதில் இருக்கும் சல்லடைகள் வழியாக அதில் உள்ள கசடுகள் நீக்கப்பட்டு கசடுகள் இல்லாத நீர் அருகில் உள்ள ஓடைக்கு செல்ல வேண்டும். ஆனால் அதற்கான வாய்ப்பு இங்கு இல்லை.

இதனால் அந்த தொட்டிக்கு முன்னதாக கழிவுநீர், சாக்கடையில் சுமார் ஒரு அடி உயரத்தில் வீடுகளின் அருகில் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக கொசுக்கள் உற்பத்தியாகி, துர்நாற்றம் வீசுகிறது. மேலும் வீடுகளின் சுவர்களும் சேதமடைந்தது வருவது மட்டுமில்லாமல், சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. 

வார்டு உறுப்பினர் மற்றும் ஊராட்சி தலைவரின் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதன் காரணமாக இப்பகுதி குடியிருப்பு வாசிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழைக்காலம் நெருங்கி வரும் நிலையில் உடனடியாக இப்பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். 





அக்டோபர் 02, 2022

விசுவக்குடி கிராம சபை கூட்டம் - அடுக்கடுக்காக கேள்வி கேட்ட பொதுமக்கள்


பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியம், அன்னமங்கலம் ஊராட்சியில் மொத்தம் 12 ஊராட்சி வார்டுகள் உள்ளது. அதில் இரண்டு மற்றும் மூன்றாவது வார்டுகள் விசுவக்குடி கிராமத்தில் உள்ளது.

இன்று அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு விசுவக்குடியில் உள்ள மூன்றாவது வார்டில் மாரியம்மன் கோயில் அருகே கிராம சபை கூட்டம் ஊராட்சியின் தலைவி மருதாம்பாள் தலைமையில் நடைபெற்றது.

காலை 11 மணி அளவில் கிராமசபை கூட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஊராட்சியின் செயலாளர் வருவதற்கு தாமதப்படுத்தியதால் மதியம் ஒரு மணிக்கே தொடங்கியது.

ஆனால் 12 வார்டு உறுப்பினர்களில் வெறும் நான்கு வார்டு உறுப்பினர்களும், அன்னமங்கலம் ஊராட்சியில் உள்ள இரண்டு ஒன்றிய கவுன்சிலர்களில் ஒருவர் கூட வராததால் கோபமடைந்த கிராம மக்கள் ஊராட்சி தலைவி மருதாம்பாளை முற்றுகையிட்டு அடுக்கடுக்காக கேள்வி கேட்டு கிராம சபை கூட்டத்தை இன்று ரத்து செய்துவிட்டு வேறு ஒரு நாளில் நடத்துமாறு சூழ்ந்து கொண்டனர்.

பின்னர் வராத வார்டு உறுப்பினர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து கிராம சபை தொடங்கியது.

மேலும் கூட்டத்தில் அன்னமங்கலம் ஊராட்சியின் வரவு செலவு அறிக்கை, விசுவக்குடியில் நிகழும் மின்னழுத்த குறைபாடு, பள்ளிவாசல் பின்புறம் உள்ள தெருவில் தெருவிளக்கு அமைத்து கழிவுநீர் கால்வாய் வசதியுடன் சாலை அமைத்தல், விசுவக்குடி ஏரியை மழைக்காலத்திற்கு முன்பே தூர்வாருதல், கல்லாற்றில் இருந்து விசுவக்குடி ஏரிக்கு வரும் வரத்து கால்வாயினை சீரமைத்தல், நூலகத்தை தரம் உயர்த்துதல்.... போன்றவைகள் விவாதித்து தீர்மானமாக ஏற்றப்பட்டது.

பின்னர் கிராம சபை முடிந்ததும் அனைவருக்கும் டீயும், வடையும் கொடுக்கப்பட்டது.