பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியம், அன்னமங்கலம் ஊராட்சியில் விசுவக்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அன்னமங்கலம் ஊராட்சியின் வார்டு எண் 2 மற்றும் 3 என இரண்டு ஊராட்சி வார்டுகள் உள்ளது.
சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கும் இங்குள்ள 2வது வார்டில் தெற்கு தெரு மற்றும் பள்ளிவாசல் தெருவில் உள்ள சாக்கடை கழிவுநீர் முதல் தெருவின் இறுதியில் ஜமாலுதீன் என்பவரின் வீட்டின் வழியாக, அருகே உள்ள ஓடையில் சென்றடைகிறது.
இந்த தெருக்களில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் அருகில் உள்ள ஓடையில் கலப்பதற்கு முன்பு தூய்மைப்படுத்த கிடைமட்ட வடிவ சமுதாய உறிஞ்சுழி ஒரு லட்சத்து 33 ஆயிரம் செலவில் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு அமைக்கப்பட்டது.
இந்த உறிஞ்சி குழியால் எந்த பயனும் இல்லை என தற்போது புகார் எழுந்துள்ளது.
சுமார் ஆறு அடி நீளம் நான்கு அடி அகலத்தில் தொட்டி கட்டி அவற்றுள் தண்ணீரை வடிக்க மணல், ஜல்லி கற்கள் போன்றவற்றை நிரப்பி உள்ளனர்.
தொட்டிக்குள் கழிவுநீர் சென்ற பிறகு அதில் இருக்கும் சல்லடைகள் வழியாக அதில் உள்ள கசடுகள் நீக்கப்பட்டு கசடுகள் இல்லாத நீர் அருகில் உள்ள ஓடைக்கு செல்ல வேண்டும். ஆனால் அதற்கான வாய்ப்பு இங்கு இல்லை.
இதனால் அந்த தொட்டிக்கு முன்னதாக கழிவுநீர், சாக்கடையில் சுமார் ஒரு அடி உயரத்தில் வீடுகளின் அருகில் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக கொசுக்கள் உற்பத்தியாகி, துர்நாற்றம் வீசுகிறது. மேலும் வீடுகளின் சுவர்களும் சேதமடைந்தது வருவது மட்டுமில்லாமல், சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது.
வார்டு உறுப்பினர் மற்றும் ஊராட்சி தலைவரின் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதன் காரணமாக இப்பகுதி குடியிருப்பு வாசிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழைக்காலம் நெருங்கி வரும் நிலையில் உடனடியாக இப்பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.