மார்ச் 26, 2022

விசுவக்குடியில் இன்று ஜல்லிக்கட்டு- நேரலையில் காணலாம்


பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, விசுவக்குடியில் ஜல்லிக்கட்டு இன்று மார்ச் 26ம் தேதி(சனிக்கிழமை) நடக்கிறது. 

இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகத்தினரும், விழா குழுவினரும் செய்துள்ளனர். இதே போல் வருகிற 30-ந்தேதி கள்ளப்பட்டியிலும், அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதி அன்னமங்கலத்திலும் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் விசுவக்குடி ஜல்லிக்கட்டை இந்த யூடியூப் இணைப்பில் சென்று நேரலையாக காணலாம்.

https://youtube.com/c/visvakudipost


மார்ச் 16, 2022

விசுவக்குடியில் BSNL டவர் அமைக்க ஜமாஅத் சார்பாக கோரிக்கை


திருச்சியில் உள்ள பிஎஸ்என்எல் பொது மேலாளரிடம் இன்று மார்ச் 16 ஆம் தேதி அளித்த கோரிக்கை மனுவின் விபரம் 

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்தில் விசுவக்குடி, முகமது பட்டினம், பிள்ளையார் பாளையம் போன்ற கிராமங்கள் உள்ளன.

சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசிக்கும் இந்த கிராமங்களில் எந்த ஒரு தொலைத் தொடர்பு கோபுரங்களும் இல்லை. 

அருகில் இருக்கும் ஊரான அன்னமங்கலத்தில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் இருந்து வரும் சிக்னல் (சமிக்ஞைகள்) சீரானதாக இல்லை.

இதனால் பேசுவதும், கேட்பதும் தெளிவாக இல்லாததால் தகவல்கள் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது.

அவசரமான நேரங்களில் உறவினர்களோடும், நண்பர்களோடும் பேசுவதற்கு கூட மிகவும் சிரமப்பட்டு வருகிறோம்.

போதிய அளவு சிக்னல் இல்லாததால் ஆன்லைன் வகுப்புகள் மூலம் கல்வி பயிலும் மாணவ- மாணவிகள் கற்றல் திறன் பாதிக்கப்படுகிறது. 

இதன் காரணமாக போன் பேசுவதற்காக இரவு நேரங்களில் கூட, வீட்டைவிட்டு வெளியே வரவேண்டிய நிலை உள்ளது.

இதுமட்டுமல்லாமல் மருத்துவம், திருமணம் போன்ற பணிகளில் அலைச்சலும், காலதாமதமும் ஏற்படுவதால் அலைபேசி பயனர்கள் ஆகிய நாங்கள் பெரும் சிக்கல்களை சந்தித்து வருகிறோம்.

மேலும் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை பயன்படுத்தப்படுவதால் கைரேகையைப் பதிவதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

நவீன காலமாக மாறிவரும் இந்த சூழ்நிலையில், வெளியுலக தொடர்புக்கு அலைபேசிகள் மிகவும் அவசியமான தேவையாக உள்ளது.

எனவே எங்கள் கோரிக்கையை ஏற்று அரசின் தொலைத்தொடர்பு (BSNL) கோபுரத்தை விசுவக்குடியில் அமைத்துக் கொடுத்து விசுவக்குடி, முகமது பட்டினம், பிள்ளையார் பாளையம் மற்றும் விசுவக்குடி அணை போன்ற பகுதிகளில் சேவை வழங்குமாறு அனைத்து மக்களின் சார்பாகக் கேட்கிறோம். 

மார்ச் 01, 2022

விசுவக்குடி ஜல்லிக்கட்டு அனுமதி மறுப்பு - பஸ் மறியல் (video...)


 பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட விசுவக்குடி கிராமத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக இருந்தது. 

இதனால் அந்தப்பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் இருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் விசுவக்குடியில் இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டுக்கு அரசு அனுமதி திடீரென ரத்து செய்யப்பட்டது.

இதனால் கோபமுற்ற கிராம மக்கள் அரசு பேருந்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.