ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெற்றுத் தர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஜல்லிக்கட்டு காளைகளுடன் வந்து திங்கள்கிழமை ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் அன்னமங்கலம், டி.களத்தூர், பூலாம்பாடி, கள்ளப்பட்டி ஆகிய கிராமங்களில் கடந்த 40 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில், உச்சநீதிமன்ற தடையால் கடந்த 4 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்த முடியவில்லை.
விசுவக்குடி கிராமத்தைச் சேர்ந்த சுமார் 20 பேர் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறோம். காளைகளுக்கு பல்வேறு ஊட்ட உணவுகளையும், நடைப் பயிற்சி, நீச்சல் பயிற்சிகள் அளித்து மாதம்தோறும் ரூ. 20 ஆயிரம் செலவழித்து வருகிறோம். எனவே, தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த, தமிழக அரசிடம் அனுமதி பெற்றுத் தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
