டிசம்பர் 23, 2015

வாக்குறுதி அளித்துவிட்டு நிறைவேற்றாமல் 4 கிராம மக்களை ஏமாற்றிய அரசு அதிகாரி. இது வேப்பந்தட்டையில்..!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்தில் அன்னமங்கலம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில்  விசுவக்குடி, முகமது பட்டினம், பிள்ளையார் பாளையம், அன்னமங்கலம் பகுதிகளில் உள்ள சாலைகள் கடந்த பல ஆண்டுகளாக போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது.

பாடசாலைகள், வைத்தியசாலைகள் போன்ற இடங்களுக்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் பொதுமக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

 ஊராட்சியின் தலைவர் முதல் முதல்வரின் தனிபிரிவு வரை கோரிக்கை வைத்தும் இந்த சாலை தொடர்ந்து சீர்செய்யபடாமல் உள்ளது.

இதனால் அதிருப்தி அடைந்த மக்கள்

கடந்த ஆகஸ்டு மாதம் 17ம் தேதி முகமது பட்டினத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது சம்பவ இடத்திற்கு வந்த வேப்பந்தட்டை நெடுஞ்சாலைதுறை உதவி கோட்ட பொறியாளர்  நவம்பரில் சாலை அமைக்கப்படும் என எழுத்துப்பூர்வமாக வாக்குறுதி அளித்தார்.

இதை நம்பிய மக்களும் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். டிசம்பர் மாதமும் முடியும் நிலையில் வழக்கம் போல அதிகாரி தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றாததை கண்டு 4 கிராம மக்களும் கவலை தெரிவித்து வருகின்றனர்.

இவரை நெடுஞ்சாலை துறை உதவி கோட்டப்பொறியாளர் என அழைப்பதை விட பொய்யான உறுதிமொழி அளிக்கும் அதிகாரி என அழைக்கும் சூழல் உருவாகி வருகிறது.
Previous Post
Next Post

post written by: