பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (செப்.24) கலெக்டர் வெங்கட பிரியா தலைமையில் நடைபெற்றது.
அப்போது விசுவக்குடி கிராமத்தை சார்ந்த அப்துல் ஹக் என்பவரது தலைமையில் கிராம மக்கள் சார்பாக கலெக்டரிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது,
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அன்னமங்கலம் ஊராட்சியில் அமைந்துள்ளது விசுவக்குடி கிராமம்.
இவ்வூரின் அருகே பச்சை மலை மற்றும் செம்மலை இடையே பாய்ந்தோடும் கல்லாற்றின் குறுக்கே சுமார் 40 மில்லியன் கன அடி நீரை சேமிக்கும் விதமாக விசுவக்குடி அணை ரூ.33.7 கோடி மதிப்பீட்டில் 27.02.2016 அன்று கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
இந்த இரண்டு மலைகளையும் இணைக்கும் வகையில் 12.30 மீட்டர் உயரம் 665 மீட்டர் நீளத்தில் கரை அமைக்கப்பட்டு அதில் இரண்டு மதகுகள் அமைக்கப்பட்டு பொது பணித்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த மதகுகள் மூலம் இரண்டு பாசன கால்வாய்கள் அமைக்கப்படும் எனவும், அதில் இடது பக்க பாசன கால்வாய் ஆயிரத்து 750 மீட்டர் நீளமும், வலதுபக்க பாசன கால்வாய் 2 ஆயிரத்து 450 மீட்டர் நீளத்தில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் 5 வருடம் 6 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பாசன கால்வாய் அமைக்கப்படவில்லை. இதற்கிடையில் விசுவக்குடி அணை இரண்டு முறை நிரம்பி சட்டமன்ற உறுப்பினர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த பாசன கால்வாய் மூலம் விசுவக்குடி, அன்னமங்கலம், தொண்டமாந்துறை போன்ற கிராமங்களில் உள்ள 859 ஏக்கர் நிலங்கள் நேரடியாகவும், பாசன கால்வாய் மூலம் செரிவூட்டப்படும் நீரால் மறைமுகமாக சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதிபெறும்.
தற்போது அணையில் 3 மீட்டர் உயரத்திற்கு சுமார் 10 மில்லியன் கன அடி நீர் தேங்கி நிற்கிறது.
எனவே விளைநிலங்களுக்கு நீர் ஆதாரத்தை உறுதி செய்யும் விதமாகவும், விவசாய பெருமக்கள் பயனடையும் விதமாகவும் கிடப்பில் உள்ள பாசன கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு இப்பகுதி விவசாயிகள் சார்பாக கேட்டு கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் செல்லதுரை கோரிக்கை குறித்து குரல்கொடுத்து பேசினார்.
