பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அடுத்துள்ள விசுவக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ரஹ்மத்துல்லாஹ் (வயது 52). இவர் வெல்டிங் பட்டறை வைத்து தொழில் செய்து வருகிறார்.
இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவருக்கு சிறு வயதிலிருந்தே மோட்டார் சைக்கிளில் பயணம் செய்வது மிகவும் பிடிக்கும். இதனால் இந்தியா முழுவதும் மோட்டார் சைக்கிளில் சுற்றுப்பயணம் செய்து பார்க்க வேண்டும் என்பது இவரது தீராத ஆசை.
இந்நிலையில் இவர் இந்தியாவை மூன்று கட்டங்களாக சுற்றி வர திட்டமிட்டார். முதல் கட்டமாக வடகிழக்கு மாநிலங்களான ஆந்திரா, அசாம், திரிபுரா, மேகாலயா, நாகலாந்து, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களுக்கு சென்றுவர 50 நாள் பயணத் திட்டத்தை வகுத்தார்.
பயணத்திற்குத் தேவையான கேமரா பொருத்தப்பட்ட ஹெல்மெட், கையுறை, உடல் பாதுகாப்பு கவச உடை வாங்கினார். மேலும் மோட்டார் சைக்கிளில் தான் எங்கே பயணிக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்ளும் ஜிபிஎஸ் கருவியையும் வாங்கி பொருத்தினார்.
இதனைத்தொடர்ந்து நேற்று தனது மோட்டார் சைக்கிளில் பயணத்தை தொடங்கினார். அதற்கு முன்னதாக இந்த 50 நாள் பயணத்திற்கு தேவையான சமையல் பாத்திரம் மற்றும் கட்டில் போன்ற உபகரணங்களை தனது மோட்டார் சைக்கிளில் கட்டி வைத்துக் கொண்டார்.
இந்தியா முழுவதும் சுற்றிவரும் அவரது பயணம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து அவரது குடும்பத்தினர், உறவினர்கள் வழியனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: தினத்தந்தி
செப்டம்பர்: 14, 2020

