செப்டம்பர் 08, 2023

விசுவக்குடியில் கழிவுநீர் கால்வாய் பாலம் சேதம் - விபத்து ஏற்படும் அபாயம் - உடனடியாக சீரமைக்க கோரிக்கை


வேப்பந்தட்டை ஒன்றியம், அன்னமங்கலம் ஊராட்சியின்  2வது வார்டு விசுவக்குடி 3வது தெருவில் சுமார் 200க்கும் அதிகமானவர்கள் வசித்து வருகின்றனர்.

இந்த தெருவின் ஆரம்பம் மற்றும் முடிவில் உள்ள கழிவுநீர்  பாலம் உடைந்து,  பள்ளம் விழுந்து சுமார் 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. பலமுறை கோரிக்கை வைத்தும் ஊராட்சி நிர்வாகம் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நடந்து செல்பவர்களும், இரண்டு சக்கர வாகனத்தில் செல்பவர்களும் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

பள்ளி சென்றுவரும்  குழந்தைகள், கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், பேருந்து நிறுத்தம் சென்று வருபவர்கள் மற்றும் வீட்டு தேவைகளுக்காக கடைகளுக்கு சென்று வருபவர்கள்  இந்த பாலத்தை கடந்துதான் சென்றுவர வேண்டும். 

மெயின் ரோட்டில் இருந்து குறுக்கு தெருவாக வளைந்தவுடன் திடீரென பள்ளம் இருப்பதை கவனிக்க முடியாமல் புதிதாக வரும் வாகன ஓட்டிகள்  விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

இந்த கழிவுநீர் பாலம் மிகவும் சேதம் அடைந்துள்ளதால் , இதனால் கனரக வாகனங்கள், ஆட்டோ மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களை 3வது தெருவுக்குள்  வர சிரமமாக உள்ளது. இதனால் இந்த தெரு மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.

எனவே சேதமடைந்த இந்த கழிவுநீர் கால்வாய் பாலத்தை ஊராட்சி நிர்வாகம் உடனடியாக சீரமைக்க பொதுமக்கள் சார்பாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



Previous Post
Next Post

post written by: