அக்டோபர் 02, 2022

விசுவக்குடி கிராம சபை கூட்டம் - அடுக்கடுக்காக கேள்வி கேட்ட பொதுமக்கள்


பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியம், அன்னமங்கலம் ஊராட்சியில் மொத்தம் 12 ஊராட்சி வார்டுகள் உள்ளது. அதில் இரண்டு மற்றும் மூன்றாவது வார்டுகள் விசுவக்குடி கிராமத்தில் உள்ளது.

இன்று அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு விசுவக்குடியில் உள்ள மூன்றாவது வார்டில் மாரியம்மன் கோயில் அருகே கிராம சபை கூட்டம் ஊராட்சியின் தலைவி மருதாம்பாள் தலைமையில் நடைபெற்றது.

காலை 11 மணி அளவில் கிராமசபை கூட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஊராட்சியின் செயலாளர் வருவதற்கு தாமதப்படுத்தியதால் மதியம் ஒரு மணிக்கே தொடங்கியது.

ஆனால் 12 வார்டு உறுப்பினர்களில் வெறும் நான்கு வார்டு உறுப்பினர்களும், அன்னமங்கலம் ஊராட்சியில் உள்ள இரண்டு ஒன்றிய கவுன்சிலர்களில் ஒருவர் கூட வராததால் கோபமடைந்த கிராம மக்கள் ஊராட்சி தலைவி மருதாம்பாளை முற்றுகையிட்டு அடுக்கடுக்காக கேள்வி கேட்டு கிராம சபை கூட்டத்தை இன்று ரத்து செய்துவிட்டு வேறு ஒரு நாளில் நடத்துமாறு சூழ்ந்து கொண்டனர்.

பின்னர் வராத வார்டு உறுப்பினர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து கிராம சபை தொடங்கியது.

மேலும் கூட்டத்தில் அன்னமங்கலம் ஊராட்சியின் வரவு செலவு அறிக்கை, விசுவக்குடியில் நிகழும் மின்னழுத்த குறைபாடு, பள்ளிவாசல் பின்புறம் உள்ள தெருவில் தெருவிளக்கு அமைத்து கழிவுநீர் கால்வாய் வசதியுடன் சாலை அமைத்தல், விசுவக்குடி ஏரியை மழைக்காலத்திற்கு முன்பே தூர்வாருதல், கல்லாற்றில் இருந்து விசுவக்குடி ஏரிக்கு வரும் வரத்து கால்வாயினை சீரமைத்தல், நூலகத்தை தரம் உயர்த்துதல்.... போன்றவைகள் விவாதித்து தீர்மானமாக ஏற்றப்பட்டது.

பின்னர் கிராம சபை முடிந்ததும் அனைவருக்கும் டீயும், வடையும் கொடுக்கப்பட்டது.

Previous Post
Next Post

post written by: