திருச்சி பேருந்து நிலையத்தில் நேற்று மதியம் நண்பருக்காக காத்திருந்தேன். அப்போது ஒரு திருநங்கை கைதட்டி யாசகம் கேட்டுகொண்டு இருந்தார்.
பின்னர் என் அருகில் வந்தார். பேசும் வாய்ப்பு கிடைத்தது. பேசினேன். முதலில் உருது மொழியில் பேசியவரிடம்,
"உங்கள் பெயர் என்ன? " என்று தமிழில் கேட்டேன்.
"ஷானு நபீஸ்" என்றார்.
"நீங்கள் முஸ்லிமா?" என்று கேட்டேன்.
" ஆம்" என்றார்.
பார்ப்பதற்கு சிறிய வயதுடையவர் போன்றும், அழகாகவும் இருந்தார்.
தொடர்ந்து " நீங்கள் என்ன படித்து இருக்கிறீர்கள்?" என்று கேட்டேன்.
" பிஎஸ்சி பயோ டெக்னாலிஜி" என்றார்.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. என் வாழ்நாளில் பார்த்த முதல் முஸ்லிம் திருநங்கையும், படித்தவரும் இவராக தான் இருக்கும்.
அவர் வேலையில் பிஸியாக இருந்தவர் என்னிடம் பணம் ஏதும் கேட்காமல் அங்கிருந்து நகர முற்பட்டார்.
" அக்கா" என்றேன்.
நெகிழ்ச்சியுடன் திருப்பியவரிடம் " உங்களை ஒரு ஃபோட்டோ எடுத்து கொள்ளட்டுமா?" என்று அனுமதி கேட்டேன்.
தயக்கத்துடன் நின்று போஸ் கொடுத்தார்.
நானும் அவரை எனது செல்லில் ஃபோட்டோ எடுத்தேன். அது சரியாக வரததால் இரண்டாவது முறை எடுக்க முயற்சி செய்யும் போது, என்ன நினைத்தார் என்று தெரியவில்லை. எனது அருகில் வந்து செல்லை வாங்கி அவரே ஃசெல்பி எடுத்து கொடுத்துவிட்டு மீண்டும் கைதட்டி யாசகம் கேட்க சென்றுவிட்டார்.
இன்று சமூகத்தில் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் இல்லை. திருநங்கையாக இருந்தாலும் அவர் முஸ்லிம் தான். அவரின் இந்த நிலைக்கு காரணம்
இறைவனா?
பெற்றோரா?
சமூகமா?
அரசா? என்ற கேள்விகளுடன் அவர் கண்களிலிருந்து மறையும் வரை பார்த்து கொண்டே இருந்தேன்.
- தௌ.மு.ஜகரிய்யா
