ஆகஸ்ட் 01, 2014

இன்ப சுற்றுலா - ரஞ்சன்குடி கோட்டை

பெரம்பலூர் மாவட்டத்திற்கு வரலாற்று ரீதியாகப் பெருமை சேர்க்கும் சுற்றுலாத் தளம் ரஞ்சன்குடி கோட்டை.பெரம்பலூரிலிருந்து சென்னை செல்லும் வழியில் 18கி.மீ. தொலைவில்,மங்களமேடு கிராமத்தை ஒட்டியுள்ள ரஞ்சன்குடியில் இக்கோட்டை அமைந்துள்ளது. 

16ம் நூற்றாண்டின் இறுதியில் குன்றின் மீது அமைக்கப்பட்ட இந்த கோட்டைக்கான கட்டுமானப்பணி, நவாப்புகளின் கட்டுப்பாட்டிலிருந்த தூங்கானை மறவன் என்ற குறுநிலமன்னரால் தொடங்கப்பட்டது.

இதற்கு ஆற்காடு நவாப்கோட்டை, ரஞ்சன்குடி கோட்டை, குன்றின்மீது
கட்டப்பட்டதால் துருவத்துக்கோட்டை என பல பெயர்கள் உண்டு.

சந்தாசாஹிப்- பிரெஞ்சு கூட்டுப்படைக்கும், முகமதுஅலி- ஆங்கிலேய கூட்டுப்ப டைக்கும் இடையே 1751ம் ஆண்டு நடந்த வால்கொண்டாபோர் ரஞ்சன்குடி கோட்டையை மையமாக வைத்து நடைபெற்றதாக வரலாற்று ஆதாரங்கள் கூறுகின்றன.

வரலாற்று சிறப்புமிக்க இக்கோட்டையில் இன்றளவும் கோட்டையைச் சுற்றி அமைக்கப்பட்ட  அகழிகள், விதானமண்டபம், பீரங்கிமேடை, கொடிமேடை, தண்டனைக்கிணறு, வெடி மருந்துக்கிடங்கு, புறவழி சுரங்கப்பாதை, பிற்கால பாண்டியர்கள் பிடியில் இருந்த போது கட்டப்பட்ட மண்டபம், முகமதியர்கள் ஆண்டபோது அமைக்கப்பட்ட மசூதிகள், இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படாத படி துளைகள் இடப்பட்ட சுற்றுச்சுவர், சூரிய சந்திர குளியள் போட ராஜா ராணி குளம், குதிரை லாயம் மற்றும் கடல்மட்டத்திலிருந்து 152அடிஉயரமுள்ள கோட்டைஉச்சியில் குளம் ஆகியன அழியாமல் உள்ளன.




தௌ.மு.ஜகரிய்யா
Previous Post
Next Post

post written by: