டிசம்பர் 07, 2023

விசுவக்குடியில் சேதமடைந்து, உயரம் குறைவாக உள்ள மின் கம்பி - சீரமைக்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்த மூன்று தினங்களில் மின்சார வாரியம் நிறைவேற்றியது. பொது மக்கள் பாராட்டு


கடந்த திங்கட்கிழமை டிசம்பர் 4 அன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. 

அதில் விசுவக்குடியை சார்ந்த முகமது சபீக், முகமது ஆசிப், முகமது அனீஸ், முகமது பாசில் மற்றும் நசுருதீன் போன்ற சமூக ஆர்வமுள்ள இளைஞர்கள் 4 விதமான கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அதில் மின்சார வாரியம் தொடர்பான மனுவும் ஒன்று. அதன் விவரம் வருமாறு...

பெரம்பலூர்  மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்தில்  விசுவக்குடி கிராமம் உள்ளது. இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும்  அதிகமானவர்கள் வசித்து வருகின்றனர்.

இங்கு பள்ளிவாசல் அருகிலுள்ள அல் ஜன்னத் சமுதாய நலக்கூடம் எதிரே உள்ள மின்சாரம் வழங்கும் மின் கம்பிகள் பாழடைந்து மிகவும் சேதமடைந்து தாழ்வாகவாக உள்ளது. 

இந்த சேதமடைந்த மின்கம்பிகள் மூலம்  மின் விநியோகம் பெறும் வீடுகளில் அடிக்கடி குறைந்த அளவு மின்சாரம் வருகிறது. இதனால் இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் பயன்படுத்தும் மின் சாதனங்கள், உபயோகப் பொருட்கள் பழுதடைந்து வருகிறது. 

மின் கம்பி குறைவான உயரத்தில்  உள்ளதால்  சோளம் முட்டை ஏற்றி வரும் லாரி, வைக்கோல் போர் ஏற்றி வரும் டிராக்டர், செல் அறுவடை இயந்திரம் போன்ற வாகனங்களை சென்றால் உரசி  மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. 

மேலும் இந்த வழியாக தான்   சிறுவர்  சிறுமியர்கள் பள்ளிக்கூடம் சென்று வருவதால் மின் கம்பி திடீரென அறுந்து விழுந்து விடுமோ? என மக்கள் அச்சத்தில் உள்ளனர். 

எனவே ஏதேனும் மின் விபத்து ஏற்பட்டு உயிர்காவு வாங்குவதற்கு முன்னர்  மின்கம்பியை உயர்த்தி கட்டியும், சேதமான மின் கம்பியை புதிதாக மாற்றி  மின்சார வாரியம்  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

இந்த மனு கிடைக்கப்பெற்ற மூன்று தினங்களுக்குள் மின்சார வாரியம் புதிய மின்கம்பம் ஒன்றை அமைத்து தாழ்வாக சென்ற மின்கம்பியின் உயரத்தை அதிகப்படுத்தி நடவடிக்கை எடுத்தனர்.

இதனால் மின்வாரியத்தை சேர்ந்த வேப்பந்தட்டை உதவி மின் செயற்பொறியாளர் செந்தில் குமார், மின் ஆய்வாளர் சுரேஷ் மற்றும் மின்சார வாரிய ஊழியர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டிய வருகின்றனர்.

அதேபோல்  பழுதான பழைய மின் கம்பிகளையும் உடனடியாக மாற்றுமாறு மின்சார வாரியத்திற்கு பொது மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.



Previous Post
Next Post

post written by: