ஜூன் 15, 2023

கடன் வாங்கி ஏமாற்றிய ஆசிரியர் பள்ளிக்கு வர எதிர்ப்பு


பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள விசுவக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் ஒருவர் கடந்த கல்வியாண்டில் இப்பள்ளியில் பணிபுரிந்தபோது பொதுமக்களிடம் வட்டிக்கு கடனாக பல லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த பணத்தை திருப்பி தராமல் அரும்பாவூர் பள்ளிக்கு பணி மாறுதலாகி சென்று விட்டார்.


இந்தநிலையில் மீண்டும் விசுவக்குடி பள்ளிக்கு பணி மாறுதலாகி நேற்று வேலைக்கு வந்தார். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் பள்ளிக்கு சென்று அந்த ஆசிரியர் இந்தப் பள்ளியில் பணிபுரிய கூடாது. பணிக்கு வந்தால் நாங்கள் பள்ளியை இழுத்துப்பூட்டுவோம் என கூறி முற்றுகையிட்டனர்.

இதனை தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் மாலா ரோஸ்லின் இந்த தகவலை உதவி தொடக்கக்கல்வி அலுவலர் அம்சவள்ளிக்கு தெரிவித்தார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உதவி தொடக்க கல்வி அலுவலர் அம்சவள்ளி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது விரைவில் இந்த பள்ளியில் இருந்து அந்த ஆசிரியர் வேறு பள்ளிக்கு இடம் மாற்றம் செய்யப்படுவார் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

- நன்றி: தினத்தந்தி 

https://www.dailythanthi.com/News/State/the-teacher-who-took-a-loan-and-cheated-protested-to-come-to-the-school-986551
Previous Post
Next Post

post written by: